டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 15 வயது மாணவியின் குடும்பம், தொடர்ந்து ஏற்பட்ட தொந்தரவுகள் காரணமாக தாங்கள் வசித்து வந்த வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுள்ளதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி ஏற்கனவே மன்னிப்பு கேட்ட நிலையில், குடும்பத்துக்கு இன்னும் சிரமங்கள் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CJP போராட்டத்தில் கலந்து கொண்டபோது, 15 வயது மாணவி ஒருவர் பிரதமர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உத்தரப் பிரதேசத்தின் நொய்டா போலீசார் மாணவி மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மாணவியின் மன்னிப்பு
சர்ச்சையைத் தொடர்ந்து வெளியான ஒரு வீடியோவில், மாணவி தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். போராட்டத்தில் இருந்த சிலரின் தூண்டுதலால் அந்த கருத்துகளை கூறிவிட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
தாயின் குற்றச்சாட்டு
மாணவியின் தாய் கூறுகையில், தனது கணவர் 2019-ல் உயிரிழந்துவிட்டதாகவும், மகளை தனியாக வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகள் மன்னிப்பு கேட்ட பிறகும், போலீசாரும் அடையாளம் தெரியாத நபர்களும் தொடர்ந்து வீட்டிற்கு வந்ததால், நொய்டாவில் இருந்த வாடகை வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“எங்களை இனி தொடர்ந்து துன்புறுத்த வேண்டாம். மற்ற குடும்பங்களைப் போல நாங்களும் அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
