மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2.5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், தடை செய்யப்பட்ட இருமல் சிரப் கடத்தல் தொடர்பான விசாரணையின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறப்பு போலீஸ் குழுவின் அதிரடி சோதனை
மால்டா மாவட்டத்தின் மங்கள்பாரி பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் மீட்கப்பட்ட பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால், அதை எண்ணுவதற்காக மூன்று எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையில் சிறப்பு நடவடிக்கைப் படை மற்றும் மால்டா, தெற்கு தினாஜ்பூர் மாவட்ட போலீசார் இணைந்து செயல்பட்டனர்.
இதையும் படிங்க : பயணிகள் கவனத்திற்கு: சேலம்–சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் தற்காலிக மாற்றம்
பழைய வழக்கில் தொடர்பு
கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி, தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் மெஹேந்திரி பாரா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 1,500 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சட்டவிரோத வர்த்தகத்தில் கிடைத்த பணம் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போது மால்டாவில் உள்ள இந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
வாடகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
விசாரணையில், அந்த குடியிருப்பு மூன்றாவது மாடியில் இருப்பதும், அது பிண்டு சர்கார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
