இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடக்கம் முதலே ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. ஜூன் மாதத்தில் கடுமையான மழைப்பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், ஜூலை மாதத்தில் பல மாநிலங்களில் மழை பெய்ததால் நிலைமை சீரானது.
உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, 2026 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை எல் நினோ (El Niño) வலுவான நிலைக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மழைப்பொழிவு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மழை பெய்தாலும், அது வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : 2027-ல் இந்தியாவை கொளுத்தி எடுக்கப்போகும் வெயில் : வெளிவந்த அதிர்ச்சி தகவல்
WMO என்ன கூறுகிறது?
உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் முக்கிய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2.9 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கக்கூடும்.
மேலும், கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வுகளும் இணைந்து உலகின் பல பகுதிகளில் மழை மற்றும் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வறட்சி, சில இடங்களில் கனமழை
எல் நினோ காரணமாக உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான தாக்கம் இருக்காது. சில நாடுகளில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும் மழைப்பொழிவு சமமாக இல்லாமல், மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : இந்தியாவில் ஏன் பருவமழை சீராக பெய்யவில்லை? அதிர்ச்சி தகவல்
ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உலகம் ஏற்கனவே கடும் வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு போன்ற காலநிலை சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், வலுப்பெறும் எல் நினோ இந்த பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
