ராஜஸ்தான் மாநிலம், பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாங்கிலால் (50). விவசாயியான இவர், தனது சொந்தக் கிராமத்தில் புதிய வீடு ஒன்று கட்டுவதற்காகத் திட்டமிட்டிருந்தார்.
நில விற்பனை மூலம் கிடைத்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் வீட்டில் இருந்தால் திருடு போய்விடும் என்ற பயத்தில் பணத்தைப் பத்திரமாக ஒரு பையில் போட்டு, தனது விவசாய நிலத்தில் குழிதோண்டி புதைத்து வைத்துள்ளார்.

பணத்தைப் புதைத்து வைத்துவிட்டுச் சென்ற மாங்கிலால், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு பணத்தை எடுப்பதற்காக மீண்டும் தனது வயலுக்கு வந்துள்ளார். ஆனால், நிலத்தில் எந்த இடத்தில் பணத்தைப் புதைத்து வைத்தோம் என்பது அவருக்கு மறந்து போனது.
நிலத்தின் பல இடங்களில் தேடிப் பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், பணத்தை இழந்துவிட்டதாகக் கருதி மன வேதனையில் இருந்தார். இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அந்த ரூ.5 லட்சம் பணம் மண்ணுக்குள்ளேயே புதைந்து கிடந்தது.
இந்த சூழலில், சமீபத்தில் நிலத்தின் ஒரு பகுதியில் தோண்டியபோது மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த அந்தப் பணப்பை எதிர்பாராதவிதமாக அவர்கள் கண்ணில் பட்டது. பணப்பையைக் கண்டெடுத்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்த போது, பைக்குள் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பெரும்பாலான ரூபாய் நோட்டுகளைக் கரையான்கள் அரித்து ரூபாய் நோட்டுகள் சேதமடைந்தனை.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையாவது மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில், பச்பத்ராவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையை மாங்கிலால் அணுகியுள்ளார். ஆனால், நோட்டுகளின் நிலையைப் பரிசோதித்த வங்கி அதிகாரிகள் அவற்றை மாற்ற முடியாது எனக்கூறி ஏற்க மறுத்துவிட்டனர்.
திருடர்களிடம் இருந்து காப்பாற்ற நினைத்த பணம், கரையான்களால் வீணான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
