தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026–27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய அரசு பதவியேற்று 85 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மக்களுக்காக புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றார். ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கு புதிய பெயர் அல்லது வடிவம் கொடுத்து மீண்டும் அறிவித்திருப்பதாகவும், அது புதிய திட்டங்களாக கருத முடியாது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : TN Budget 2026: மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் முதல் லேப்டாப் வரை
மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குவது, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் நிதி மேலாண்மை சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், கொரோனா காலத்திலும் வருவாய் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் இருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
