தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. கூட்டத்தொடரின் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பதே தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.
