வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் இடையே, காட்பாடி ஓடைபிள்ளையார் கோயில் அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு ஆட்சியர் திடீரெனச் சென்றார். அங்கிருந்த சமையலறை, உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பறை ஆகியவற்றின் தூய்மையைக் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, உணவகத்தில் சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை வாங்கி சாப்பிட்டு பார்த்த ஆட்சியர், அதன் தரத்தை உறுதி செய்தார். தொடர்ந்து, அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்களிடம் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்தின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, உணவகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை என்பதை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதனையேற்று, உணவகத்தில் உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டார்.
