பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு இனி எவ்வாறு பயன்படுத்தும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஐந்து ஆண்டுகளில் விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் வெளியூர்களில் வசிப்பவர்களுக்குச் சொந்தமானவை என தெரிவித்தார். தற்போது உள்ளூர் மக்களின் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் நிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான தொழில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். அந்தப் பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத் தொழில்கள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தால், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கும் அமைச்சர் கீர்த்தனா கூறினார். பரந்தூர் பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டால், விமான நிலையப் பகுதிகளிலேயே வெள்ளம் புகுந்த சம்பவங்களைப் போன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தத் திட்டத்தால் சுமார் 1,500 நீர்நிலைகள் மற்றும் 1,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
