வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் கறிக்கடையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மெக்கானிக் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக திருவலம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் இஸ்மாயில் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த டிங்கிரி என்பவர் முதுகில் பெரிய பையை மாட்டிக்கொண்டு அந்தக் கறிக்கடைக்கு வந்துள்ளார். அங்கு அவர் கறி வாங்கிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வரும் பிரபு என்பவர், டிங்கிரி கொண்டு வந்திருந்த பையில் என்ன இருக்கிறது என கேட்டதாகவும், பின்னர் அவர் கையில் வைத்திருந்த ஸ்பேனரால் அந்தப் பையை வேகமாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பையில் இருந்ததாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தன. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பையை கொண்டு வந்த டிங்கிரி, மெக்கானிக் பிரபு, அருகில் இருந்த 8 வயது சிறுவன் கபிலன் மற்றும் கறிக்கடை உரிமையாளர் இஸ்மாயில் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெடிச்சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சேர்க்காடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மெக்கானிக் பிரபுவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் வெடிபொருட்கள் தொடர்பான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பையில் இருந்ததாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டுகள் எதற்காக தயாரிக்கப்பட்டன? அவை யாரிடம் கொண்டு செல்லப்பட்டன? டிங்கிரி அந்த வெடிகுண்டுகளை எங்கிருந்து எடுத்து வந்தார்? அவற்றை அவர் எதற்காக எடுத்துச் சென்றார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தால் அம்முண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வு மற்றும் போலீசாரின் விசாரணை முடிவடைந்த பின்னரே, வெடிபொருட்களின் தன்மை, அவை எவ்வாறு அங்கு வந்தன, அவற்றின் பின்னணி உள்ளிட்ட முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
