தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சூழல் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதனால் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களிலும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
பல மாவட்டங்களில் மிதமான மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு மழை?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
