தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று, ஆகஸ்ட் 29-ந்தேதி, கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மின்னணு ரேஷன் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளில் 96.21 சதவீதம் பேரின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பயனாளிகளின் கைவிரல் ரேகை பதிவையும் முடித்து, இந்த பணியை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை ரேஷன் கடை மூலம் கைவிரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளலாம். கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியில் விடுபட்டுள்ளவர்கள், தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
