டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழையும் பலத்த காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானது. மேலும், 15 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதையும் படிங்க : தமிழகத்தில் சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு: டீ, காபி விலையும் அதிகரிக்குமா?
மழை காரணமாக டெல்லியின் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தனர். சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தில் சிக்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.
குருகிராமின் சோஹ்னா சாலை அருகே உள்ள இஸ்லாம்பூர் பகுதியில் சேவை சாலையில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதாக கூறப்படுகிறது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அடுத்த சில நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
