சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எலுமிச்சை பழங்களின் வரத்து கணிசமாகக் குறைந்ததைத் தொடர்ந்து, அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் அதிக அளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். ஆனால், அங்கு எலுமிச்சை விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு: டீ, காபி விலையும் அதிகரிக்குமா?
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமார் 150 முதல் 180 டன் வரையிலான எலுமிச்சை பழங்கள் வந்து சேரும். ஆனால், தற்போது 20 முதல் 30 டன் எலுமிச்சை மட்டுமே வந்து சேருகிறது. வரத்து பற்றாக்குறையால் சில்லறை சந்தையில் எலுமிச்சையின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பழத்தின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒருபுறம் வரத்து குறைந்து விலை உயர்ந்தாலும், மற்றொருபுறம் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எலுமிச்சை பழங்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அழுகிய பழங்களைக் குப்பையில் கொட்டும் நிலை உருவாகியுள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
